







ஆசிரியர்
வரலாறு
நவீன தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி.
பிறப்பு கல்வி

முன்னோர்
புதுமைப்பித்தனின் தாத்தா உலகளந்த பெருமாள் பிள்ளை தன் பெயரை விருத்தாசலம் பிள்ளை என மாற்றிக்கொண்டார். ஆங்கிலேயரின் கீழ் நில அளவை துறையில் பணியாற்றினார்.
பெற்றோர்
புதுமைப்பித்தனின் தந்தை உ. சொக்கலிங்கம் பிள்ளை பி.ஏ.பட்டம் பெற்று நிலப்பதிவு வட்டாட்சியராகப் பணிபுரிந்தார். புதுமைப்பித்தனின் தாயார் பர்வதத்தம்மாள்.
புதுமைப்பித்தன் ஏப்ரல் 25, 1906 அன்று கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். புதுமைப்பித்தன் தங்கை ருக்மிணி என்கிற செல்லத்தம்மாள். புதுமைப்பித்தனின் எட்டு வயதில் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின் சித்தியிடம் வளர்ந்தார். சொக்கலிங்கம் பிள்ளைக்கு இரண்டாம் மனைவியில் மூன்று மகன்கள்.
கல்வி
புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை தென்ஆற்காடு உட்பட பல ஊர்களுக்கு பணி மாற்றம் பெற்றார். இதனால் புதுமைப்பித்தன் தனது இளமைக்காலக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் பயின்றார். 1918-ம் ஆண்டு தந்தை ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான திருநெல்வேலியில் அர்ச் யோவான் ஸ்தாபன பள்ளியில் படிப்பை நிறைவு செய்தார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலை (B.A.) சேர்ந்து 1931-ம் ஆண்டு பட்டம் பெற்றார். புதுமைப்பித்தனின் கல்லூரித் தோழர்களில் ஒருவர் இலக்கியவிமர்சகரான ஆ. முத்துசிவன். இன்னொருவர் தீபன்.
தனி வாழ்க்கை
புதுமைப்பித்தனின் வாழ்க்கையைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு மற்றும் புதுமைப்பித்தனின் நண்பர் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் எழுதிய குறிப்புகளில் இருந்தே அறியமுடிகிறது.

சென்னை வாழ்க்கை
1918-ம் ஆண்டு சொக்கலிங்கம் பிள்ளை பணி ஓய்வுபெற்றமையால் குடும்பத்துடன் புதுமைப்பித்தன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார். தாமிரபரணி அருகே வண்ணார்பேட்டை என்னும் இடத்தில் குடியிருந்தார்.
புதுமைப்பித்தன் பட்டப் படிப்பை முடிப்பதற்குள் இருபத்தைந்து வயதை கடந்திருந்ததால் அரசு பணியில் சேரும் வாய்ப்பு இல்லாமல் ஆனது. புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை புதுமைப்பித்தனை சட்டம் படிக்க வைக்க விரும்பினார். புதுமைப்பித்தன் இலக்கியம் கற்க விரும்பினார். திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள முத்தையா பிள்ளையின் "கடைச் சங்கம்" என்ற புத்தக கடைக்குச் சென்று நண்பர்களுடன் கூடி இலக்கியம் பேசத் தொடங்கினார். அங்கே பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் வருவதுண்டு. இலக்கிய ஆர்வத்தால் தந்தையுடன் சண்டை ஏற்பட்டு 1933-ம் ஆண்டு மனைவியை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கச் சொல்லிவிட்டு, தனியாக சென்னை சென்றார். அங்கே குறைந்த ஊதியத்தில் இதழியலாளராக வாழ்ந்தார்.
குடும்பம்
புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் அரசூழியராக இருந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளையின் மகள் கமலாம்பாளை 31 ஜூலை 1931 அன்று மணந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள். (கண்மணி) கமலாம்பாள் கமலா விருத்தாசலம் என்ற பேரில் கதைகளை எழுதிய எழுத்தாளர்.
தந்தையுடனான முரண்பாடுகள்
புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை மகன் மேல் ஏமாற்றம் கொண்டிருந்தார். அவர் மரபான உள்ளம் கொண்டவர். தென்னிந்திய சாதிகள் என்னும் எட்கார் தர்ஸ்டனின் நூலை அடியொற்றி Indo Europian Races என்ற தலைப்பில் சாதிகள் பற்றிய நூல் ஒன்றை பல பாகங்களாக எழுதியவர். அவர் புதுமைப்பித்தனின் இதழியல் ஈடுபாடு, நவீன இலக்கியம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
1943-ம் ஆண்டு சென்னை மீது ஜப்பானியர்களின் குண்டுவீச்சு பயம் இருந்த காரணத்தினால் புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாம்பாளை திருநெல்வேலியில் தங்க வைக்க விரும்பினார். சென்னை, திருநெல்வேலி என இரண்டு இடங்களில் வாடகை கொடுக்க இயலாத சூழலில் இருந்த புதுமைப்பித்தன் தன் தந்தை சொக்கலிங்கப் பிள்ளையிடம் இருந்த நான்கு வீடுகளில் ஒன்றில் கமலாம்பாள், மகள் தினகரி இருவரையும் தங்க வைக்க விரும்பினார். அதற்கு சொக்கலிங்கப் பிள்ளை மறுக்கவே புதுமைப்பித்தன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தந்தையிடம் பாகப் பிரிவினைப் பெற்றார். தந்தையிடமிருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார்.
தன் தந்தையிடம் வாங்கிய நிலத்தை புதுமைப்பித்தன் தினசரியை விட்டு விலகி வறுமையில் இருந்த காலத்தில் குறைந்த விலைக்கு விற்றார். அப்பணத்தை சொந்தமாகத் திரைப்படம் எடுப்பதில் செலவிட்டார்.
புனே, திருவனந்தபுரம்
திரைப்படத் தொழிலில் ஆர்வம் கொண்டிருந்த புதுமைப்பித்தன் அதன்பொருட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் புனேயில் சிலகாலம் வாழ்ந்தார். அப்போது காசநோய் முதிர்ச்சி அடைந்தது. இறுதிக் காலத்தை தன் மனைவியின் ஊரான திருவனந்தபுரத்தில் கழித்தார்.
இதழியல்
புதுமைப்பித்தன் 1936-ல் சென்னையில் டி.எஸ்.சொக்கலிங்கம், வ.ராமசாமி ஐயங்கார் ஆகியோருடன் அறிமுகமானார். காரைக்குடியில் இருந்து ராய. சொக்கலிங்கம் வெளியிட்டு வந்த 'ஊழியன்' பத்திரிக்கையில் உதவி ஆசிரியர் பணி கிடைத்தது. ஊழியனில் மற்றொரு ஆசிரியருடன் ஏற்பட்ட சண்டையில் வேலையை விட்டு மீண்டும் சென்னை சென்றார். மணிக்கொடி இதழின் பொறுப்பாசிரியராக பி.எஸ். ராமையா பதவி ஏற்ற போது புதுமைப்பித்தன் அவருடன் நெருங்கமான நட்பு கொண்டிருந்தார்.
1936-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக மணிக்கொடி இதழ் நின்றது. இதன் பின் டி.எஸ். சொக்கலிங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் 'தினமணி' இதழில் உதவி ஆசிரியராக 1936 ஆம் ஆண்டு புதுமைப்பித்தன் பொறுப்பேற்றார். 1943-ம் ஆண்டு வரை தினமணியில் வேலை செய்த புதுமைப்பித்தன் அதன் நிர்வாகத்திற்கும், டி.எஸ். சொக்கலிங்கத்திற்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் அவருடன் சேர்ந்து விலகினார்.
1944-ம் ஆண்டு டி.எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய 'தினசரி' பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். தினசரியில் உதவி ஆசிரியராக பணி செய்து கொண்டிருந்த போது புதுமைப்பித்தனுக்கு திரைத் துறையில் நாட்டம் ஏற்பட்டது. இதழியல் பணியை துறந்தார்.
1946-ம் ஆண்டு புதுமைப்பித்தன் தனக்கு குடும்பச் சொத்தில் பங்காகக் கிடைத்த பணத்தில் 'சோதனை' என்ற இதழை தொடங்க முனைந்து அதை நிறைவேற்ற முடியாமல் பணத்தை இழந்தார்.
இலக்கிய வாழ்க்கை
புதுமைப்பித்தன் நெல்லையில் இருக்கும்போதே இலக்கிய விவாதங்கள் வழியாக நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டார். மாப்பசான், ஆண்டன் செகாவ், ஓ.ஹென்றி, எட்கார் ஆல்லன் போ போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளால் ஈர்க்கப்பட்டு அவ்வடிவம் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறுகதைகள்
தொடக்க காலம்
புதுமைப்பித்தன் நெல்லையில் இருக்கும்போதே அவருடைய சிறுகதைகள் வெளியாகத் தொடங்கின. அவருடைய முதல் சிறுகதை 'குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் 1933-ம் ஆண்டு வெளிவந்தது. 1934 முதல் புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரைப் பிள்ளையார்' சிறுகதை மணிக்கொடி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை. இச்சிறுகதை ஏப்ரல் 1934, 22, 29-ம் தேதிகளில் தொடர்ந்து வெளிவந்தது. இக்காலகட்டத்தில் ஊழியன் இதழில் அகலிகை, தேக்கங்கன்றுகள், தெருவிளக்கு போன்ற கதைகள் வெளிவந்தன.
'புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிய 1934-ம் வருடத்தில் மட்டும் நாற்பது நாற்பத்தைந்து கதைகள் எழுதியிருக்கிறார். வெகு ஆவேசமான ஆரம்பத்தையே இது காட்டுகிறது. இக்கதைகளில் பெரும்பான்மையானவை பற்றி மிக உயர்வாகச் சொல்வதற்கு இல்லை என்றாலும் அவருடைய மற்ற கதைகள்போல் இவற்றிலும் அவருக்கே உரித்தானபார்வை ஊடுருவி நிற்கிறது எனலாம்' என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார்.
மணிக்கொடிக் காலம்
புதுமைப்பித்தன் முதல்கட்ட மணிக்கொடியில் எழுதத் தொடங்கியவர். அவர் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மௌனி ஆகிய முன்னோடிகளுடன் இணைத்து மணிக்கொடி எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். மார்ச் 1935-ல் மணிக்கொடி இரண்டாம் முறையாக தொடங்கப்பட்ட போது அதன் முதல் இதழில் புதுமைப்பித்தன் 'துன்பக்கேணி' சிறுகதை வெளிவந்தது. முதல்கட்ட மணிக்கொடியில் புதுமைப்பித்தன் முப்பது கதைகளும், இரண்டாம்கட்ட மணிக்கொடியில் 15 கதைகளுமாக மொத்தம் 45 கதைகளை புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதினார் என்று ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.
இக்காலகட்டத்தில் ஊழியன் இதழில் பதிமூன்று கதைகளும், ஆறு தழுவல் கதைகளும் புதுமைப்பித்தனால் எழுதப்பட்டன என ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.
கலைமகள் காலம்
புதுமைப்பித்தனின் கதைகள் ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் போன்ற இதழ்களில் வெளிவந்தன. அவருடைய இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க கதைகள் பல கி.வா. ஜகந்நாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் இதழில் வெளிவந்தன. தன் இயல்புக்கு ஒவ்வாதது என தான் விலகிச்சென்ற கலைமகள் இதழ் தன்னுடைய கதைகளை வெளியிட்டதை குறிப்பிட்டு புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதியின் கூற்றுப்படி 1938 முதல் 1946 வரை கலைமகளில் புதுமைப்பித்தன் 11 கதைகளை எழுதினார். பின்னர் கலைமகள் குடும்ப இதழாக தன்னை மாற்றிக்கொண்டது.
தொகுப்புகள்
புதுமைப்பித்தனின் கதைகளின் வெளியீடு - பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதியின் முடிவுகளின்படி புதுமைப்பித்தனின் இறுதிக்கதை என ஆய்வாளர்கள் கருதுவது கயிற்றரவு. அது அ.கி. கோபாலன் நடத்திய காதம்பரி இதழில் 1948ல் வெளிவந்தது.
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 கதைகள் மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'புதுமைப்பித்தன் சிறுகதைகள்' என்னும் பெயரில் நவயுக பிரசுரமாக வெளிவந்தது. அதற்கு ரா.ஶ்ரீ.தேசிகன் முன்னுரை எழுதினார்.ஆறுகதைகள், நாசகார கும்பல் ஆகிய தொகுதிகளும் 1941 வாக்கில் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டன.
1943 டிசம்பரில் கலைமகள் காரியாலயம் வெளியீடாக 'காஞ்சனை முதலிய கதைகள்' என்னும் தொகுப்பு வெளியாகியது. இந்நூலுக்கு புதுமைப்பித்தன் எச்சரிக்கை என்னும் தலைப்பில் முன்னுரை எழுதியுள்ளார். டிசம்பர் 23,1943 தேதியிடப்பட்ட கட்டுரை அது. இந்நூலுக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ மெய்ப்பு பார்த்தார். 1947 செப்டம்பரில், சென்னை மயிலாப்பூர் தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக 'ஆண்மை' தொகுதி புதுமைப்பித்தன் எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது.
புதுமைப்பித்தன் மரணத்துக்குப் பின் முல்லை பதிப்பகம், தமிழ்ச்சுடர் நிலையம் ஆகியவை அவர் கதைகளை வெளியிட்டன. 1953 முதல் ஸ்டார் பிரசுரம் அவருடைய கதைகளை தொடர்ச்சியான தொகுப்புகளாக வெளியிட்டது. ஆ.இரா.வேங்கடாசலபதி புதுமைப்பித்தன் எழுதியவை என உறுதியாகத் தெரிந்த கதைகளை மட்டும், தழுவல்கதைகளை நீக்கி 97 கதைகளை அவர் 2000 த்தில் வெளியிட்ட செம்பதிப்பில் சேர்த்துள்ளார்.
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியிருக்கிறார். தன் இலக்கிய ரசனைப் பற்றி நமது கலைச் செல்வம், கடவுளின் கனவும் கவிஞனின் கனவும், இலக்கியத்தில் உட்பிரிவுகள், இலக்கியத்தின் இரகசியம் போன்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். மேலும் கம்பன், பாரதி, பாரதிதாசன் எனக் கவிஞர்கள் குறித்தும், கவிதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார்.
தமிழர் நாகரீகத்தின் கிராம வாழ்க்கை, அரிஸ்டாட்டில் கண்ட ராஜீயப் பிராணி போன்ற தனிக் கட்டுரைகள், இராமாயணம், மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றி சிறு கட்டுரைகள், நாட்டுப் பாடல்கள், தனிப்பாடல்கள் பற்றிச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். 'தினமணி', 'தினசரி' நாளிதழ்களில் பணியாற்றிய போது தொடர்ந்து புத்தக மதிப்புரைகளை ரசமட்டம் என்ற பெயரில் எழுதினார். புதுமைப்பித்தனின் பெரும்பாலான கட்டுரைகள் இதழியல் தேவைக்காக எழுதப்பட்டவை.

கவிதைகள்
புதுமைப்பித்தன் வசன கவிதைகளை ஆதரிக்கவில்லை. யாப்பில் அடங்கும் கவிதைகளையே புதுமைப்பித்தன் எழுதினார். சரஸ்வதியை நோக்கி கேட்கிற தொனியில் புதுமைப்பித்தன் எழுதிய 'நிசந்தானோ சொப்பனமோ' என்ற கவிதை பிரபலமானது.
புதுமைப்பித்தன் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதினார். வறுமையில் வாழ்ந்த கு.ப.ரா இறந்த போது நிதி திரட்டியவர்களை கேலி செய்து 'ஓகோ உலகத்தீர்! ஓடாதீர்!' என்ற கவிதையை எழுதினார். இளம் காதலர்களை கேலி செய்து 'காதல் பாட்டு' என்ற தலைப்பில் நையாண்டி கவிதை எழுதினார். அந்த கால இந்திய நிலையை 'இணையற்ற இந்தியா' என்ற தலைப்பில் கேலிக் கவிதை எழுதினார். 'தொழில்' என்ற கவிதை முருகனை நோக்கி பாடுவதாகவும் தொழிலில் உள்ள ஏற்ற தாழ்வுகளைக் கண்டிப்பதாகவும் அமைந்தது.
புதுமைப்பித்தனின் பெரும்பாலான கவிதைகள் எளிய யாப்பு முறையில் எழுதப்பட்ட நையாண்டிக் கவிதைகள். ச.து.சு. யோகியார் போன்ற நண்பர்களுடன் அரட்டையடிக்கையில் இயல்பாக அவர் மரபுக்கவிதைகளை சொல்வதுண்டு என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் சில அவருடைய நண்பர்களின் நினைவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாடகங்கள்
புதுமைப்பித்தன் சில சிறு நாடகங்கள் எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் எழுதிய முதல் நாடகம் 'பக்த குசேலா - கரியுக மாடல்'. குசேலர் கதையை பகடி செய்து எழுதிய நாடகம் இது. புதுமைப்பித்தனின் 'நிச்சயமா நாளைக்கு' நாடகம் மத்தியதரக் குடும்பத்தின் அன்றாட சிக்கல்களைப் பற்றி பேசுவது. செல்வம் அதிகமாக கொண்ட அறிவிலியையும், ஞானம் கொண்ட ஏழைக்கும் இடையில் நடக்கும் போட்டி நாடகம் 'வாக்கும் வக்கும்'. இது திரைக்கதை வடிவில் எழுதப்பட்டது.
வரலாற்று நூல்கள்
புதுமைப்பித்தன் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கை வரலாற்றை 'பேசிஸ்ட் ஜடாமுனி' என்ற தலைப்பில் எழுதினார். ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வாழ்க்கையை 'கப்சிப் தர்பார்' என்ற தலைப்பில் எழுதினார். கப்சிப் தர்பாரின் முதல் பகுதி மட்டும் புதுமைப்பித்தன் எழுதினார். பிற்பகுதிகளை பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய ந. ராமரத்னம் எழுதினார்.
நாவல்
புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிய 'சிற்றன்னை' நாவல் எழுதி முடிக்கப்படாமல் பாதியில் நின்றது. புதுமைப்பித்தன் ஒரு நாவலுக்கு 'மூக்கபிள்ளை' எனப் பெயரிட்டிருந்தார். அதனை பெருநாவலாக எழுதும் கனவு புதுமைப்பித்தனுக்கு இருந்தது. புதுமைப்பித்தன் எழுதி முடிக்காத நாவல் 'அன்னையிட்ட தீ' என்ற பேரில் பின்னர் ஆ.இரா.வேங்கடாசலபதி முயற்சியால் நூலாக வெளிவந்தது.
மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் 58 சிறுகதைகளுக்கு மேல் உலக இலக்கியத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய 'யாமா த பிட்' நாவலின் முதல் பாகத்தின் ஒன்பது அத்தியாயங்களை மொழிபெயர்த்தார். குப்ரினின் நாவல், அ.கி. கோபாலன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த காதம்பரி இதழில் 'பலிபீடம்' என்ற தலைப்பில் வெளியானது. இறுதி நான்கு அத்தியாயங்கள் க.நா.சுப்ரமண்யத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டன. புதுமைப்பித்தன் ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் மொழிபெயர்த்தார்.
திரைப்படத் துறை
1946ல் புதுமைப்பித்தன் எஸ்.எஸ். வாசன் இயக்கத்தில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த 'ஔவையார்' படத்தின் கதை வசனம் எழுத ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் படம் தயாரான போது புதுமைப்பித்தனின் வசனம் இடம்பெறவில்லை. அந்தப்படத்திற்காக அவர் எழுதிய வசனங்களில் சில தொ.மு.சி. ரகுநாதனின் நூலில் உள்ளன. அவை நூலாக வெளிவரவில்லை.
1946-ல் புதுமைப்பித்தன் பாஸ்கர் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்துக்காக ஏ. முத்துஸ்வாமி இயக்கிய 'காமவல்லி' (1948) என்னும் படத்திற்கு கதை வசனம் எழுதினார்.
1947-ல் புதுமைப்பித்தன் சொந்தமாக படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 'பர்வத குமாரி புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் 'வசந்தவல்லி' என்னும் தலைப்பில் 'குற்றாலக் குறவஞ்சி' கதையை படமாக்க திட்டமிட்டார். நாகர்கோயில் மகாதேவன் நடிக்க, புதுமைப்பித்தன் எழுத்தில் இந்தப்படம் வெளிவரும் என்னும் விளம்பரம் பத்திரிக்கையில் வந்ததோடு நின்றது.
1947ல் ராஜமுக்தி என்னும் படத்துக்காக புதுமைப்பித்தன் எழுதிய திரைக்கதையில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. ராஜமுக்தி படக்குழுவினருடன் புனா சென்றார் அங்கே அவருக்கு காச நோய் ஏற்பட்டது. உடல்நிலை மோசமாக 1948-ம் ஆண்டு புனாவிலிருந்து திருவனந்தபுரம் திரும்பினார்.
1947ல் புதுமைப்பித்தன் கோயம்புத்தூரைச் சேர்ந்த குப்புராஜ் என்பவர் மதுரை சித்ரகலா ஸ்டுடியோ சார்பில் தயாரிக்க எண்ணிய ஒரு (சரஸ்வதி விஜயம் அல்லது லட்சுமி விஜயம்) திரைப்படத்துக்காக எழுதிய திரைக்கதை வடிவம் 'வாக்கும் வக்கும்' என்ற பேரில் பின்னர் வெளியாகியது. அதை (உரிய அனுமதி இன்றி) தழுவியே ஏ.பி. நாகராஜன் 'சரஸ்வதி சபதம்'(1966) என்னும் படத்தை உருவாக்கினார்.
மறைவு
புதுமைப்பித்தன் புனே நகரில் இருந்து காசநோய் முற்றிய நிலையில் ஜூன் 6,1948 அன்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கே மருத்துவமனையில் சேர்ந்தார். கடும் வறுமையில் தமிழ்ப்புத்தகாலயம் கண. முத்தையா போன்றவர்களுக்கு கடிதம் எழுதி நிதியுதவி கோரினார். அவருடன் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் மட்டுமே உடனிருந்தார். காசநோய் முற்றி ஜூன் 30, 1948 அன்று புதுமைப்பித்தன் இயற்கை எய்தினார்.
நிதிசேர்ப்பு, குடும்பத்திற்கு உதவி
புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின் எழுத்தாளர்கள் அவருக்காக நிதி சேகரித்தனர். எஸ்.எஸ். மாரிசாமி காண்டீபம் இதழில் 1951ல் அவருக்கு நிதிகோரி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை இதழான ஈழகேசரி நிதிதிரட்டியது. மலாயாவில் தமிழ் முரசு சார்பாக கோ. சாரங்கபாணி நிதி திரட்டினார். கல்கி புதுமைப்பித்தனுக்கு நிதி சேகரித்தார். அந்நிதி அவர் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. புதுமைப்பித்தனின் மனைவிக்கு தமிழக அதிர்ஷ்டச்சீட்டில் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் பின்னர் கிடைத்தது. புதுமைப்பித்தனின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு மாதந்தோறும் காப்புரிமைத் தொகை அளிக்க ஸ்டார் பிரசுரம் முன்வந்தது.